சர்ச்சை பேச்சு : “மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” – அமைச்சர் பொன்முடி!

மன்னிப்புக் கோரினார் அமைச்சர் பொன்முடி…

அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவரின் துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, திருச்சி சிவா எம்பிக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் பேசியதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.