நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம், தமிழ்நாடு மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த 8ஆம் தேதி அதிகாலை மீன்பிடிக்க சென்றிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகுகளில் பயணித்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் சிறைபிடித்து, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைக்கப்படுவர் என தகவல் வெளியாகியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவம், தமிழ்நாடு மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த மாதம் 9ஆம் தேதி அன்று நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றிருந்த 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் அவர்களின் சிறைக்காலம் வரும் 21ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.