மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து குருதிக்கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது 10 கிலோமீட்டர் தூரம் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் சுற்றி மீண்டும் மருத்துவ கல்லூரியில் வந்தடைந்தது. இந்த போட்டியில் மதுரை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 4500 பேர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கக்கூடிய தியாகராஜர் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த தினேஷ் என்கிற மாணவனும் இந்த மராத்தான் போடியில் பங்கேற்றுள்ளார். போட்டியில் பங்கேற்ற பின் மாணவன் தினேஷ் மயங்கி விழுந்ததை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் தினேஷ் உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவன் தினேஷ் உயிரிழந்தது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரையில் இன்று காலை ரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவர் தினேஷ் மாரத்தான் முடிந்து 1 மணி நேரத்திற்கு மேலாக சக கல்லூரி மாணவர்களுடன் இயல்பாகவே இருந்துள்ளார். அதன் பிறகு மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலை 8.45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 10.10 மணியளவில் மாணவன் தினேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி 10.45 மணியளவில் உயிரிழந்தார்” இவ்வாறு அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.