மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது மலிவான அரசியல் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் திமுகவினர் அமைதிகாக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என நினைவு கூர்ந்துள்ளார். அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி, மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமைபெற உறுதியேற்பதுதான் விடுதலைப் பவள விழாவான இந்த 75ஆம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களின் நோக்கமாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தனது மடலில் கூறியுள்ளார்.
இறையாண்மைமிக்க ஒன்றிய அரசு – இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் வழியே கூட்டாட்சிக் கருத்தியலை முன்னெடுக்கின்ற நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இந்திய இராணுவத்தில் பணியாற்றி, ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணன் உடலுக்குச் செலுத்தப்பட வேண்டிய அரசின் மரபார்ந்த மரியாதையைச் செலுத்திடுமாறு தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாம் பணித்திருந்ததாகவும், அதன்படி மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட இராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வீரவணக்கம் செலுத்தியதாகவும் தனது மடலில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவரும் அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர், அதுகுறித்து அமைச்சரும் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என சாடியுள்ளார். தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, அமைச்சரை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், “இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்” எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் என தமது மடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகுந்த கண்ணியத்தோடு நடந்துகொண்டதாக அவர் பாராட்டியுள்ளார்.
அமைச்சரின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, திமுகவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உணர்வெழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், “மதவெறி அரசியலின் மலிவான விளம்பரத்திற்குப் பதிலடி என்ற வகையில் நாமும் அதற்கு இடம் அளித்துவிடக்கூடாது” என்ற தி.மு.கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அறிக்கையை ஏற்று, திமுவினர் அமைதி காத்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். “இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது” என தனது மடலில் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம், அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கட்சியும் செயல்பட்டு வருகிறது எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் தாம் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என தெரிவித்துள்ளார்.







