தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் அருகே ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நேற்று மாலை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முதல் நாளான நேற்று சட்ட ஒழுங்கு குறித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அமைச்சர் காந்தி, தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, 4 மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் 28 துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.







