சமூக வலைதளங்கள் சக்கை போடு போடும் இந்தக் காலத்திலும் புத்தகங்களை நோக்கி ஆயிரக் கணக்கானோர் படையெடுத்து வருகின்றனர். சென்னை புத்தகக் காட்சியில் குவிந்த ஏராளமனோர் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை தேடித் தேடி வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக சென்னை மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய மக்களும் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து, ஆர்வத்தோடு புத்தகத்தை வாங்கிச் செல்கின்றனர். மேலும் எழுத்தாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் இந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அனைத்து கிடைக்கும்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, லட்சக்கணக்கான மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் வருகை புரிந்து, தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்வது வழக்கம், அந்த வகையில் புத்தகக் காட்சியின் போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து, வாழ்க்கைக்குத் தேவையான சில தலைப்புகளில் மக்களுடன் உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
புத்தக வாசிப்பாளர்களுக்காக சுமார் 900 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது , தமிழ் ஆங்கிலம் என்ற இரு புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது, இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புத்தகக் கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மேலும், இந்த புத்தக்காட்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, கதை உள்ளிட்ட
பல்வேறு இலக்கியப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கபடும். அதேபோல் இந்தாண்டும் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தக கண்காட்சிக்கு வரும் மக்கள் எந்த ஒரு சிரமமின்றி தங்களின் வாகனத்தை நிறுத்த பார்க்கின் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிப்பிட வசதி ,மேலும் ஏடிஎம் வசதி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள்,சொற்பொழிவுகளை வெளியே இருக்கும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பெரிய ராட்சத எல் இ டி திரையும் அமைக்கப்பட்டுள்ளது. சிறியர்வர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் ஏராளமான புத்தகங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை காண ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த புத்தக கண்காட்சி ஆனது வருகின்ற ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.







