பாஜக மகளிர் நிர்வாகிகளை இழிவாக பேசிய திமுக நிர்வாகியை கைது செய்ய கோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து இழிவாக பேசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சைதை சாதிக் பேச்சை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடைபெற்றதால் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் அண்ணாமலை மீது முறையற்று தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மாநகர காவல் சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 364 பாஜகவினர் மீதும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.