இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.2 லட்சம் கோடி – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.2 லட்சம் கோடி கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட்…

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.2 லட்சம் கோடி கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.

உற்பத்தி அதிகரிப்பு, ஊரக மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட 9 குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும்,  ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

  • உலக அளவில் பொருளாதாரம் சவால்களைச் சந்தித்தாலும் வலுவான நிர்வாகம், செயல் திறன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
  • நம் நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.
  • 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்புக்காக 5 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
  • அதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
  • புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் அரசு ஊதியம் வழங்கப்படும்.
  • EPFO பதிவு செய்த இளைஞர்களுக்கு 15,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாத ஊதியம் ரூ.1 லட்ச்த்திற்குள் இருக்கும்
  • இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும்.
  • இந்தத் திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.