திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாகுபலி என வர்ணிக்கப்பட்ட அனுப்ரதா மண்டல் மாடு கடத்தல் வழக்கில் சிபிஐயால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அதனை இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
சமீபகாலமாக ஊழல் வழக்குகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்க அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்திருந்த பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பிர்பும் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் அக்கட்சியின் பாகுபலி என வர்ணிக்கப்பட்டவருமான அனுப்ரதா மண்டல் நேற்று சிபிஐயால் மாடு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராக அனுப்பப்பட்ட சம்மன்களை அனுப்ரதா மண்டல் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அனுப்ரதா மண்டல் வீட்டில் நேற்று சிஆர்பிஎஃப் வீரர்களுடன் அதிரடியாக சூழ்ந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 20ந்தேதி வரை தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி பெற்றனர்.
அரசியல் வன்முறைகளும், அதிரடிகளும் அடிக்கடி அரங்கேறும் பிர்பும் மாவட்டத்தில் தனி ராஜாங்கமே நடத்தி வந்தவர் என விமர்சிக்கப்பட்டவர் அனுப்ரதா மண்டல். பிர்பும் மாவட்டத்தில் தங்கள் கட்சியினருக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளுக்கு அனுப்ரதா மண்டலே காரணம் என பாஜகவினர் குற்றம்சாட்டிவந்தனர். இந்நிலையில், அவர் நேற்று கைது செய்யப்பட்டதை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேளதாளங்களுடன் உற்சாகமாக நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.