நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு-அழகிரி கண்டனம்

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, பாஜகவினர் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றம்சாட்டினார்.…

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, பாஜகவினர் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழ்நாடு நிதி அமைச்சர் வந்த கார் மீது காலணிகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. எதையும் அரசியல் ஆதாய நோக்கோடு செயல்படுகிற பாஜகவினர், சகிப்புத்தன்மை இல்லாமல் இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற அநாகரீகப் போக்கு தொடருமேயானால், அதற்கான எதிர்வினையை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று அழகிரி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த
ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி என்ற ராணுவ முகாமில்
நடத்தப்பட்ட பயங்கரவாத தக்குதலில் வீரமரணமடைந்தார்.

அவருடைய உடல் இன்று விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் உயர் அதிகாரிகள் பலர் வந்திருந்தினர். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பாஜக தொண்டர்கள் பலர் அங்கு குவிந்திருந்தனர்.

இந்நிலையில், ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்தில்
இருந்து வெளியே செல்லும்போது, அங்கு குவிந்திருந்த பாஜகவினர் திடீரென அவரது காரை மறித்து காலணியை தூக்கி வீசி அடாவடியில் ஈடுபட்டனர்.

உடனடியாக நிதியமைச்சரின் வாகனத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர்
மறியலில் ஈடுபட இருந்த தொண்டர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.