29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

”தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதும்” – அமைச்சர் பொன்முடி

சென்னை அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு அரங்கத்தில் 17வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 2020 – 2021 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் 10,637 பேர் பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில் இன்று பதிவு செய்துள்ள 6,340 பேர் பட்டங்களை பெற்றனர். மொத்தம் 3,968 பெண்களும் 6,099 ஆண்களும் 2020 – 21 ஆண்டில் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். அவர்களுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ”உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று சிறப்பு பதக்கம் பெறுபவர்கள் மொத்தம் 283 பேர். அதில் ஆண்கள் 117, பெண்கள் 166 பேர். இது தான் திராவிட மாடல். சமூக வரலாறை தொலைக்காட்சி மூலமும் பத்திரிக்கை மூலமும் நம் வரலாற்றை தெரிந்து கொண்டு இருப்பீர்கள். தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.அது முக்கியம்.

நான் முதல்வன் திட்டம் என்றால், வேலை தேடுபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. வேலை தருபவராகவும் இருக்க வேண்டும். படிக்கும் போதே உன்னதமான நோக்கத்தோடு இருக்க வேண்டும். இதுதான் தன் பிறந்த நாளில் நம் முதலமைச்சர் சொன்னது. நான் முதல்வன் என்றால் எந்த துறையில் நீங்கள் இருக்கிறீகளோ, அதில் நீங்கள் முதல்வராக இருக்க வேண்டும்.உங்கள் எண்ணம் எப்படி இருக்கிறதோ அப்படி தான் உயர்வு இருக்கும்.

தொழிற்சாலைகளில் எல்லாம் பணியாற்றுகிற வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். தொழிற்சாலைகள் உங்களுக்கு பயிற்சி அளிக்க செய்துள்ளோம். பட்டம் பெற்றுள்ள நீங்கள் வளரும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். சமுதாயம் சமுதாய உணர்வு வளர வேண்டும். நான் தமிழில் பேச ஆரம்பித்த உடன் தான் கை தட்டினீர்கள். ஏனென்றால் அது தான் புரிகிறது. தப்பில்லை. ஆனால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும். இரு மொழி கொள்கை தான் முக்கியம்.

பெரிய ஓட்டை என்பது இன்டர்நேஷனல் மொழி. அது போதும். ஆனால் சின்ன ஓட்டையை புகுத்த நினைக்கிறார்கள்.  தமிழ் கூட சின்ன ஓட்டை போன்று தான். தமிழ்நாட்டில் மட்டும் தான் சிறப்பாக இருக்க முடியும். பன்னாட்டு உறவுகளை உருவாக்கி கொள்ள ஆங்கிலம் வேண்டும். எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். மூன்றாவது மொழியை படித்துக்கொள்ளட்டும். ஆனால் கட்டாயம் ஆக்கக் கூடாது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம்.


முன்பு நுழைவு தேர்வு இருந்த போது கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரியில்
27,000 பேர் சேர்ந்தனர். இப்போது 75000 பேர் சேர்கின்றனர். புதிய கல்விக்கொள்கையில் 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பில் எல்லாம் பொது தேர்வு. அப்படி இருந்தால் இடைநிற்றல் அதிகம் ஆகும். நான் 1963-64 இல் SSLC படிக்கும் போது 16 பேர் தான் பள்ளியில் படித்தனர். 15 பேர் ஆண்கள் 1 பெண். அவர் பெயர் திலகவதி. அண்மையில் தான் இறந்தார். இப்போது அதே பள்ளியில் 300க்கும் மேற்பட்ட ஆண்களும் , 400க்கும் மேற்பட்ட பெண்களும் படிக்கின்றனர்.

ஒரு காலத்தில் அனைவரும் ஆண்கள், ஒரு பெண். ஆனால் இப்போது அனைவரும் பெண்கள் ஒருவர் ஆண் என்று மாறி இருக்கிறது. அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்விக்கு சென்றால் ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். இது யாரையும் சங்கடப்படுத்துவதாக இல்லை. மொழிக்கொள்கை என்றால் அது இரு மொழிக்கொள்கையாக இருக்க வேண்டும். முன்பெல்லாம் நீங்கள் உங்கள் அம்மாவிடம் கேட்பீர்கள், பணம் தேவை என்று. இப்போது முதலமைச்சர் அளித்த ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா, ஒரு 100 ரூபாய் கொடு என்று பெற்றோர் கேட்பார்கள்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading