பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே ஐந்து பெட்டிகள் தடம் புரண்ட போது ரயிலின் ஒரு பெட்டி கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, விபத்து நிவாரண வாகனம் மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. ரயில் விபத்து காரணமாக, PDDU – பாட்னா வழித்தடத்தின் பாதைகள் பாதிக்கப்பட்டன. எல்லா இடங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
தனாபூர் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆகிய இடங்களில் இருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் நிவாரணப் பணிகளும், மீட்புப் பணிகளும் நடைபெற்றன. நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 9.45 மணிக்கு DDU சந்திப்பில் இருந்து பாட்னாவிற்கு புறப்பட்டது.
மேலும், புனே டானாபூர் எக்ஸ்பிரஸ், பாபா வைத்தியநாத் எக்ஸ்பிரஸ், அப் சண்டிகர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், பாட்லிபுத்ரா எக்ஸ்பிரஸ், டவுன் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ், டவுன் பாட்லிபுத்ரா எக்ஸ்பிரஸ், பகத் கி கோத்தி காமாக்யா எக்ஸ்பிரஸ், பிகானர் குவஹாத்தி எக்ஸ்பிரஸ், திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அப், டவுன் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட பல ரயில்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றன.
இதனிடையே, தண்டவாளங்களை சரியாக பராமரிக்காததே ரயில் தடம்புரண்ட விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.







