“உஷாரய்யா உஷாரு” – புழக்கத்திற்கு வந்துள்ள உயர்தர ரூ.500 கள்ளநோட்டு… கண்டுபிடிப்பது எப்படி?

ரூ.500 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் வந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புழக்கத்தில் வந்துள்ள புதிய வகை உயர்தர போலி 500 ரூபாய் நோட்டுகள் குறித்து உள்துறை அமைச்சகம் முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக
DRI, FIU, CBI, NIA, SEBI போன்ற முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்குப் பகிரப்பட்ட அந்த எச்சரிக்கையில், போலி ரூபாய் நோட்டுகளின் தரம் உண்மையான 500 ரூபாய் நோட்டுடன்  அதிகளவு ஒத்திருப்பதால், கண்டறிவது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளது.

இந்த போலி நோட்டுகளில் உள்ள தவறை சரிவர கவனிக்கப்படாமல் போகலாம், அதனால் இந்த போலி 500 ரூபாய் நோட்டுகள் மிகவும் ஆபத்தானவை என அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் பொதுமக்களும் நிறுவனங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

போலி 500 ரூபாய் நோட்டுகளை எப்படி கண்டுபிடிப்பது:


போலி நோட்டுகள் உண்மையான ரூ.500 நோட்டுகளுடன் அதிகளவு ஒத்திருந்தாலும் சிறிய எழுத்துப் பிழை இருப்பது அவற்றை அடையாளம் காண உதவுகிறது. அதன்படி, “RESERVE BANK OF INDIA” என்ற வாக்கியத்தில், “RESERVE” இல் உள்ள “E” என்ற எழுத்து தவறுதலாக “A” என்ற எழுத்தால் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கள்ளநோட்டுகளைத் தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கள்ளநோட்டுகளைக் கண்டறிவதை எளிதாக்க, அனைத்து வங்கிக் கிளைகளிலும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.