அஸ்ஸாமில் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தார்.
நாடு முழுவதும் அரை லிட்டர் முதல் 20 லிட்டர் வரை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டாலும் தொலைதூர பயணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வாறு பொதுமக்களின் மத்தியில் அதிக அளவில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உபயோகம் அதிகரித்துள்ளதால் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியாமல் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. பாலிஎத்திலின் டெரெஃபெலேட் என்பது பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர பிளாஸ்டிக் தொடர்பான பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை பாலியஸ்டராகும்.
இவ்வாறாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு அஸ்ஸாம் அரசு தடை விதித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அஸ்ஸாமின் தலைநகரான டிஸ்பூரில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
”பாலிஎத்திலின் டெரெஃபெலேட் மூலம் தயாரிக்கப்படும் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீா் பாட்டில்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தத் தடை அக்டோபா் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதேபோல அடுத்த ஆண்டு அக்டோபா் முதல், மாநிலத்தில் 2 லிட்டருக்கும் குறைவான குடிநீா் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-இன்படி, ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கான தடையும் மாநிலத்தில் கடுமையாக அமல்படுத்தப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தாா்.