‘பாகுபலி-3’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாகுபலி’. பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்த இத்திரைப்படம் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ஈட்டியது. உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு பாகுபலி இரண்டாம் பாகம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த இப்படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் 2 பாகங்களுமே மாபெரும் வெற்றியை அடைந்த நிலையில், இதன் மூன்றாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில், பாகுபலி 3ம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதரபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜமெளலி, “பாகுபலியை உருவாக்கிய நகரம் என்பதால் ஹைதரபாத் என்னுடைய இதயத்தில் தனி இடத்தை பிடித்துள்ளது. தென்னிந்திய சினிமா உலகில், பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ‘பாகுபலி’க்கு முக்கிய இடம் உண்டு. பாகுபலி 3ம் பாகம் கண்டிப்பாக விரைவில் உருவாகும். இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.




