அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கில், இருதரப்பு வாதங்கள் நிறைவுற்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தது. இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக மருத்துமனையில் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரியும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள காலத்தை காவலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனி மனுவும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. ஆள்கொணர்வு மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என்று அமலாக்கத்துறையும், கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காததால் ஆள்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என செந்தில் பாலாஜி தரப்பும் வாதிட்ட நிலையில் வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி தனது வாதத்தை முன் வைத்தார். அதில் நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரிக்கான அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என வாதிட்டார். மேலும் கஸ்டம்ஸ் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், என்.டி.பி எஸ் சட்டங்களில் கஸ்ட்டி எடுத்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அமலாக்கத்துறைக்கு அதுபோல அதிகாரம் வழங்கப்படவில்லை என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், CrPCயின் 41A பிரிவை பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான காரணங்கள் இருந்தால், கைது செய்வதற்கு முன் சம்மன் அனுப்ப வேண்டிய அவசியம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்தார். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் அவரிடம் விசாரிக்க நிபந்தனைகளை விதித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவர்களின் அனுமதி பெற்றுதான் விசாரிக்க முடியும் என்கிற நிபந்தனையால், மருத்துவமனைக்கு அதிகாரிகள் சென்றபோதும் விசாரணை நடத்த முடியவில்லை, காபி மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளனர் என துஷார் மேத்தா தன் வாதத்தில் கூறினார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக்கூடாது எனக் கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது என வாதிட்டார்.
சுமார் 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில், இரு தரப்பினருக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.







