கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் எதிரான வீடியோக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு வெறுப்புணர்வுக்கு ஒருபோதும் இடமில்லை என கூறியுள்ளது.
கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கனடா நாட்டுக்கான விசா சேவை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் சிலா் விடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனா்
இந்நிலையில், கனடா பொது பாதுகாப்புத் துறைஎக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :
‘ஹிந்துகளுக்கு எதிராக பகிரப்படும் விடியோ புண்படுத்தக் கூடியது மற்றும் வெறுக்கத்தக்கது.
வெறுப்புணாவுக்கு ஒருபோதும் கனடா இடமளிக்காது. அதேபோல், மக்களைப் பிளவுபடுத்த மட்டுமே உதவும் மிரட்டல் அல்லது பயத்தைத் தூண்டுதல் போன்ற செயல்களுக்கும் இந்த நாட்டில் இடமில்லை. ஒருவரையொருவா் மதித்து, சட்டத்தின் விதிகளைப் பின்பற்ற மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தைத் தூண்டும் செயல்களுக்கு இடமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







