பாபநாசம் பட பாணியில ஒரு சம்பவம் நிஜத்துல அரங்கேறிருக்கு…. எங்க? என்ன நடந்ததுச்சு? பார்க்கலாம்.
கேரளா மாநிலம், ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான பிந்து குமார். இவரை கடந்த
26 ஆம் தேதி முதல் காணவில்லை என்று இவரது குடும்பத்தினர் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிந்துகுமாரை தேடி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், காணாமல் போன பிந்து குமாரின் செல்போன் எண் சிக்னலை வைத்தும், அவர் யாரிடம் கடைசியாக பேசினார் என்ற விவரத்தையும் சேகரித்தனர். இதற்கிடையே பிந்து குமாரின் இருசக்கர வாகனம் கொட்டாரக்கடவு பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து பிந்து குமாரின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் கடைசியாக சங்கனாச்சேரி பகுதியை சார்ந்த முத்துக்குமார் என்பரிடம் பேசியது தெரியவந்துள்ளது. அதனால் முத்துக்குமாரின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரது செல்போன் சுவிச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் போலீசார் அவரது வீட்டிற்கே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது முத்துக்குமார் குடும்பத்தினரோடு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே போலீசார் முத்துக்குமாரின் வீட்டை சுற்றி சோதனை செய்து பார்த்துள்ளனர். அங்கு வீட்டின் முன்புறத்தில் சமீபத்தில் குழி ஒன்று தோண்டி மூடப்பட்டிருப்பது போன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அந்த இடத்தை தோண்டி பார்த்துள்ளனர்.
போலீசார் சந்தேகித்தது போன்று குழியை தோண்ட தோண்ட துர்நாற்றம் வீசியிருக்கிறது. ஒருகட்டத்தில் குழிக்குள் ஒரு ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.
உடலை புதைத்து விட்டு துர்நாற்றம் வெளியே வராமல் இருப்பதற்காக அதற்கு மேல் காங்கிரீட் போட்டு அதற்கு மேல் மீண்டும் மண்ணை நிரப்பி உள்ளதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட உடலை கைப்பற்றிய போலீசார் பிந்து குமாரின் உறவினர்களை அழைத்து அடையாளம் கண்டு உறுதி செய்தனர்.
இதனையடுத்து முத்துக்குமாரை கைது செய்த போலீசார், காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட பிந்துகுமாரை முத்துக்குமார்தான் கொலை செய்தாரா? கொலைக்கு என்ன காரணம்? இல்லை வேறு யாராவது கொலை செய்துவிட்டு முத்துக்குமார் மீது பழியை போடுவதற்காக திசை திருப்புகிறார்கலா என்று பல கோணங்களில் போலீசார் முத்துக்குமாரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.