18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியா? ‘வீர தீர சூரன்’ குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு கூறியது என்ன?

வீர தீர சூரன் படம் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார். தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது படமான வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பண்ணையாரும்…

வீர தீர சூரன் படம் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.

தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது படமான வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, இப்படத்திற்காக 10 நாள்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி ஒன்றைக் குறிப்பிட்டு கலைத்தாயின் இளைய மகன் என இயக்குநர் அருண் குமாரை எஸ்.ஜே.சூர்யா பாராட்டியிருந்தார். அது என்ன காட்சி என பலரிடமும் ஆர்வம் எழுந்தது. இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, “நடிகர் விக்ரமுடன் நடித்துவரும் படத்தில் ஒரு 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. அக்காட்சியால், நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

இதனால், எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்ட காட்சி இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.