அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்…

7 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மொத்தமாக ரூ.186 கோடியும், 2 முன்னாள் எம்எல்ஏக்கள் ரூ.7.36 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.  ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர்,…

7 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மொத்தமாக ரூ.186 கோடியும், 2 முன்னாள் எம்எல்ஏக்கள் ரூ.7.36 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், தங்கமணி, காமராஜ் ஆகிய 7 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுவரை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள 7 முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.11 கோடி சொத்துக்கள் குவித்திருப்பதாகக் கூறி அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 22.07.2021 முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதே போல முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 51.09 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாகக் கூறி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 15.03.2022 முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, 84 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு 34 லட்சம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 27.78 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு செய்து கடந்த 16.09 2021 அன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, 34 லட்சம் ரொக்கம், 9 சொகுசுக் கார்கள் உள்பட சொத்து ஆவணங்கள், 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 1 கோடியே 80 லட்சம் அந்நிய செலாவனியாக முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை குவித்ததாகக் கூறி அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா அகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 18.10.2021 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 4,870 கிராம் தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி அவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 21.1.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி 2 கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி

இதைபோல முன்னாள் அமைச்சர் தங்கமணியும் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சம் ரூபாய் சொத்துக்கள் குவித்துள்ளதாகக் கூறி அவர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 15.12.2021 அன்று சோதனை நடத்தினர். சோதனையில் 2 கோடியே 16 லட்சம் பணம், 1.13 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

முன்னாள் அமைச்சர் காமராஜ்

அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ் தற்போது நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்தது லஞ்ச ஒழிப்பு துறை 2022 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குள்ளான 7 அமைச்சர்களும் சேர்த்து மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடந்த 7 முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 6 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் பணம், 28.181 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

33 பேர் மீது வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடர்பாக மொத்தம் 7 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது 811 கோடி ரூபாய்க்கான டெண்டர் முறைகேடு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர்

இதை போல நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். 315 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 4.72 கோடி சொத்துக்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னாள் எம்எல்ஏ சத்யா

இந்த நிலையில் தற்போது சென்னை தி.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2023 செப்டம்பர் 13 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.64 கோடி சொத்துக்கள் வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சத்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.