‘அக்னிபாத்‘ திட்டம் குறித்து திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் புரிதல் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் அவர் கூறியதாவது, “உலகம் முழுவதும் பல நாடுகளிலும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் யோகாவுக்கான ஆதரவு மிகப்பெரிய அளவில் உள்ளது. யோகாவை தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அளவில் விழாவாக எடுத்து கொண்டாட வேண்டும்.” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர்,
“அக்னிபாதை (அக்னிபாத்) திட்டம் குறித்து திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் புரிதல் இல்லை. ராணுவ வீரர்களை விட அக்னி வீரர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாதுகாப்புத்துறையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் தேர்வுகள், ஆட்சேர்ப்பு தொடர்ந்து நடைபெறும். அதேவேளையில் அக்னிபாதை திட்டமும் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படும்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க இளம் வீரர்கள் தேவை. அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு பணியில் முன்னுரிமை, பல மாநில காவல்துறையின் பணிகளில் முன்னுரிமை, மஹிந்திரா, டாட்டா நிறுவனங்களின் பணிவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.”

“அடிப்படை நிலையிலேயே பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அக்னிபாதை திட்டம். அக்னிபாதை திட்டத்தை இளைஞர்கள் யாரும் எதிர்க்கவில்லை. இத்திட்டத்துக்கு எதிரான போராட்டம் அரசியல் கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் திசைதிருப்பும் நாடகம்” என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.