பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது அவர், அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுத்தான் முதலமைச்சராக பதவியேற்றாரா என்ற சந்தேகம் எழுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தி, 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தமிழ் மண்ணில் கொல்லப்பட்ட நாள், தமிழக மக்களுக்கு துயரமான நாள் என குறிப்பிட்டார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் நிரபராதி என நீதிமன்றம் தனது உத்தரவில் எங்கும் குறிப்பிடவில்லை என்றும், தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தியே உச்சநீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதை அடுத்து நேற்றில் இருந்து முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிரபராதி விடுவிக்கப்பட்டது போன்று முதலமைச்சர் நடந்து கொள்வதாகவும், அவரது இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுத்தான் அவர் முதலமைச்சராக பதவியேற்றாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவை பொருத்தவரை 7 பேருமே குற்றவாளிகள்தான் என்றும், அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் கூறியுள்ள அண்ணாமலை, சிறையில் இருந்து வெளிவந்திருப்பவர் கொண்டாட படக்கூடியவர் அல்ல என்றார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டிய அண்ணாமலை, அக்கட்சிக்கு ஆளுமை இருக்குமானால் அது திமுக கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும் என்றார்.
முன்னாள் பிரதமரை கொன்றவர்களை கொண்டாடக்கூடாது என்றும், அப்படி கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பது தவறு என்றும் கூறிய அண்ணாமலை, உச்சீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மீதமுள்ள 6 பேருக்கும் நேரடியாக பொருந்தாது என்றும் குறிப்பிட்டார்.
நெல்லை கல் குவாரியில நடைபெற்ற வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து சீல் வைக்கப்பட்டிருக்கும் கல் குவாரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த குவாரி திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதுதான், அனைத்து குவாரிகளுக்கும் பாடமாக இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏக்களின் ஆதரவை அதிமுக கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ள அண்ணாமலை, பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் கூறினார்.









