நாமக்கல் பள்ளி மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டது தொடர்பான வழக்கை முடித்து காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்த நாமக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த 11ம் வகுப்பு
மாணவர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் தகாத முறையில் பேசியதாலும், தாளாளர் மற்ற மாணவர்கள் முன் அடித்ததாலும், மோகன் ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் சிபிசிஐடி போலீசார், விசாரணைக்கு பின்,
தற்கொலை எனக் கூறி, வழக்கை முடித்து வைக்க கூறி, நாமக்கல் நீதிமன்றத்தில்
அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையை நிராகரித்த நாமக்கல் நீதிமன்றம், வழக்கை கோப்புக்கு எடுத்துக்
கொண்டு தாளாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி தாளாளர் தங்கவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி M.நிர்மல் குமார் பிறப்பித்த உத்தரவில், விடுதியில்
தங்கிப் படிக்கும் மாணவனை கவனிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை
என்றும், சக மாணவர்கள் பிரச்னை செய்வது தொடர்பாக பல முறை புகார் அளித்தும்
பள்ளி நிர்வாகம் அதை தீவிரமாக கருதவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வழக்கை விசாரித்த போலீசாரும் மிக சாதாரணமாக இந்த வழக்கை
கையாண்டுள்ளதாகவும், அத்தனை ஆதாரங்களையும் ஆராய்ந்து, நாமக்கல் நீதிமன்றம்
வழக்கை கோப்புக்கு எடுத்துள்ளதால், இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை
தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.