2ஜி அலைக்கற்றை ஏலத்தின் மூலம் நாட்டிற்கு ரூ.1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சிஏஜி வினோத் ராய் கூறியது ஆட்சி மாற்றத்திற்காக நிகழ்த்தப்பட்ட மோசடி என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். வினோத் ராய் யாருக்காக இதனை செய்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சருமான ஆ.ராசா, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே 30 மெகா ஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றையை தாம் ஏலம் விட்டதாகக் கூறினார். ஆனால் அந்த ஏலத்தால் நாட்டிற்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அப்போது இந்திய தலைமைக் கணக்காயராக இருந்த வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்ததாக ஆ.ராசா சுட்டிக்காட்டினார்.
ஆனால் தற்போது 5 ஜி அலைக்கற்றை சேவையில் 51 ஜிகா ஹெர்ட்ஸ் ஏலம் விடப்பட்டபோதும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்தான் மத்திய அரசுக்கு வருமானம் வந்திருப்பதாக ஆ.ராசா தெரிவித்தார். சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை விலைபோக வேண்டிய 5ஜி அலைக்கற்றை ஏலம் மிகக்குறைவாக சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை மட்டுமே ஏலம் போயிருப்பதன் பின்னணி என்ன என ஆ.ராசா கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை ஏலத்தால் மத்திய அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய தலைமை கணக்காயர் வினோத் ராய் கூறியது ஒரு மோசடி என்றும் ஆ.ராசா தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக இவ்வாறு பொய்யான அறிக்கையை வினோத் ராய் தாக்கல் செய்ததாக குற்றம்சாட்டிய ஆ.ராசா, யாருக்காக அவர் இதனைச் செய்தார் என்பது குறித்து தற்போதை மத்திய பாஜக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றார். அவ்வாறு மத்திய அரசு விசாரணை நடத்தவில்லை என்றால், புதிதாக ஆட்சிக்கு வரும் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார்.




