முந்திரி விற்ற கல்லூரி மாணவி – கல்வியை தொடர உதவி செய்த அமைச்சரின் மகன்

தந்தைக்கு உதவியாக நெடுஞ்சாலையில் முந்திரி விற்ற கல்லூரி மாணவியின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் கல்வியைத் தொடர செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவரும் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகனுமான மொக்தியார் மஸ்தான் உதவி செய்துள்ளார்.…

தந்தைக்கு உதவியாக நெடுஞ்சாலையில் முந்திரி விற்ற கல்லூரி மாணவியின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் கல்வியைத் தொடர செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவரும் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகனுமான மொக்தியார் மஸ்தான் உதவி செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோ.பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர்
சண்முகம். இவருக்கு திருமணமாகி நான்கு பெண் குழந்தைகள் உள்ளன. இவரது முதல் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது மகள் வசந்தி என்பவர் வடலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

வசந்தியின் தாய், தந்தை இருவருமே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே விவசாயம் செய்து வருகின்றனர். வறுமையான குடும்பத்தில் பிறந்த வசந்தி, சிறுவயதிலிருந்தே படிப்பிற்காகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் தாய், தந்தை படும் கஷ்டத்தை போக்குவதற்காக கல்லூரி முடித்துவிட்டு இரவு நேரங்களில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முந்திரி விற்று, அதன் மூலம் வரும் வருமானத்தை கல்லூரி படிப்பிற்கும் தனது இதர செலவுகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வசந்தி, முந்திரி விற்கும் நேரத்தில், அவரிடம் விவரங்களைக் கேட்கும் ஒரு நபர், அதனை வீடியோவாக படமெடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவியது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவரும் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகனுமான மொக்தியார் மஸ்தான், வசந்தி மற்றும் அவரது தந்தை சண்முகம் ஆகியோரை
நேரடியாக அழைத்து, வசந்தியின் படிப்பிற்கு உதவு செய்வதாக உறுதியளித்தார். மேலும் இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கல்லூரி கட்டணமான ரூ.22,500ஐ வசந்தியிடம் வழங்கினார்.

படிப்பு தான் எதிர்காலத்தில் உதவும். தாய், தந்தையின் கஷ்டத்தை போக்க நினைப்பது சரிதான். அதற்காக நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தினாலும், வருங்காலத்தில் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். எனவே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
படிப்பிற்காக எந்த உதவி உங்களுக்கு தேவைப்பட்டாலும் என்னை அழையுங்கள் என்று,
தனது தொலைபேசி எண்ணையும் மொக்தியார் மஸ்தான் கொடுத்து அனுப்பினார். மொக்தியார் மஸ்தானின் இந்த செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.