99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதோடு, அவர்களை தமிழகம் அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிஷா சென்றுள்ளது.
இந்த நிலையில் விபத்து நடைபெற்ற பகுதி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழக அரசின் குழு பார்வையிட்டது. தமிழக அரசு குழுவின் தகவலின் படி ரயிலில் பயணித்த 99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரு தமிழர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டியுள்ளதாகவும் இன்றுக்குள் அவர்களும் அடையாளம் காணப்படுவார்கள் என அமைச்சர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.







