எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எட்டு வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என தீர்ப்பளித்தது.
அதேநேரம், மறு அரசாணை வெளியிட்டு எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று தீர்ப்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பால், சுற்றுச்சூழல் அனுமதியை பெறாமல் சாலை அமைக்கலாம் என்ற சூழல் உருவாகி உள்ளதாகவும், 8 வழி சாலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பு தொடரும் என விவசாயிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.







