ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பணம் கேட்டு
மிரட்டியதாக 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெர்படா குறிச்சியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் பெருமாள். இவரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த பாபு என்ற டில்லிபாபு என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு ஹரிஷ் மற்றும் அனிஷ்
ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்துவிடு, நான் ரெட் ஜெயன்ட்
மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இல்லையேல் உன்னை என்ன செய்வேன் என
தெரியாது என மிரட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து வெங்கடேஷ் பெருமாள், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் தொடர்பு
கொண்டு விசாரித்தார். டில்லிபாபு என்பவர் அங்கு வேலை செய்யவில்லை எனவும்,
தங்களது நிறுவனத்தின் பெயரை தவறுதலாக யாரோ பயன்படுத்தி மிரட்டியுள்ளதாகவும்
தெரிய வந்தது.
உடனே, இது குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஸ்டுடியோ இயக்குநர் சரவணமுத்து
என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்
பேரில் போலீசார் மோசடி மற்றும் மிரட்டுதல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து,
விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஹரிஷ் என்ற
சீனிவாசன் மற்றும் அனிஷ் என்ற ஜெகநாத் அனிஷ் ஆகியோருக்கு கள்ளக்குறிச்சியை
வெங்கடேஷ் பெருமாள் என்பவர் பல லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இதனால் ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மஞ்சுநாதன் உதவியுடன், டில்லிபாபுவிடம் பணம் வசூலித்து தரக்கோரி கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து டில்லிபாபு, வெங்கடேஷ் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், ஹரிஷ் மற்றும்
அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனே தர வேண்டும் என்று மிரட்டியதும்
போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதன்பேரில், ரெட்ஜெயிண்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகக் கூறி,
நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, மிரட்டல் விடுத்த டில்லி பாபு, ஹரிஷ்,
அவரது சகோதரர் அனிஷ், மஞ்சுநாதன், மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த சிதம்பரம்,
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமதாஸ், தஞ்சாவூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 7
பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.