டெல்லியில் நடைபெற்ற மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
6வது மொபைல் மாநாடு கண்காட்சி இன்று முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் 6வது மொபைல் மாநாடு கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் வைக்கப்பட்டிருந்த 5ஜி தொழில்நுட்ப சேவை கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5ஜி சேவையின் செயல்பாடு பிரதமர் மோடிக்கு சோதனையாக காண்பிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, 5ஜி அடிப்படையிலான டிரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் மூலம் விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் பிரதமர் மேற்பார்வையிட்டார்.
தற்போது பயன்படுத்தி வரும் 4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தை 5ஜி வழங்கும் என்றும், துண்டிப்பில்லாத இணைப்பையும், தரவு பகிர்வு நேரம், பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல், வேகமான வீடியோ பதிவிறக்கம், அலைக்கற்றை திறன் உள்ளிட்ட நெட்வார்க் செயல்திறனை அதிகரிக்க செய்யும் என்றும் மத்திய தொழில்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த 5ஜி அலைக்கற்றையை ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கும், ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடாஃபோன் ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் நிறுவனம் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதிக்குள் டெல்லி, மும்பை, பெங்களூரு,சென்னை, அகமதாபாத், சண்டிகர், கொல்கத்தா, காந்திநகர், ஐதராபாத், குருகிராம், ஜாம்நகர், லக்னவ், புனே ஆகிய பெரு நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதலில் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும். இந்த சேவையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார தாக்கம் 2035ம் ஆண்டில் சுமார் ரூ.35 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.