கிளிகள் வளர்க்க தடை விவகாரத்தில் மதுரை மக்கள் ஒப்படைத்த 500க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு இறக்கைகள் வெட்டப்பட்டுள்ளதாக என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறினால் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972, (திருத்திய சட்டம் 2022)-ன் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மதுரை மாநகர் நரிமேடு மற்றும் செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல் கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து வனத்துறைக்கு புகார்கள் வந்தது.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கிளிகள் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தியதோடு வீடுகளில் வளர்க்கப்பட்ட கிளிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மைக் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி முதல் வீடுகளில் வளர்க்கப்பட்ட 700க்கு மேற்பட்ட பச்சைக்கிளிகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் ஒப்படைத்த சுமார் 700 கிளிகளில் 500 கிளிகளுக்கு மேல் வீடுகளில் பறந்து விடக்கூடாது என்பதற்காக கிளிகளின் இறக்கைகள் வெட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பாக இரண்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கால்நடைத்துறை வனத்துறை மற்றும் தன்னார்வர்கள் மூலம் கிளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இறக்கைகள் வளரும் வரை அவற்றை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இறக்கைகள் முழுமையாக வளர்ந்த பிறகு நல்ல நிலையில் உள்ள கிளிகளை வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.