இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான் அணி ஐசிசியிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதனை ஐசிசி நிராகரித்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவித்தது.
எனவே, பாகிஸ்தான் அணி இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் மைதானங்கள், அவர்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்புக் குழு இந்தியா வந்து இதுகுறித்த சோதனைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தான் அணிக்கான தூதுக்குழு இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு குறித்து கலந்துரையாடி ஆய்வு செய்தது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை அக்டோபர் 14-ம் தேதிக்கு மாற்ற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் அன்று நவராத்திரி தினத்தையொட்டி பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும் என்பதால் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றையும் பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விளையாட்டு அரசியலுடன் இணையக் கூடாது என்பதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதனால், இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணியை இந்தியா அனுப்ப எங்களது அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகள் இதுபோன்ற விளையாட்டுத் தொடர்களுக்கு குறுக்கீடாக இருக்காது என பாகிஸ்தான் அரசு நம்புகிறது. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் பாதுகாப்பு குறித்து ஐசிசியிடமும், இந்திய அதிகாரிகளிடமும் எங்களது அக்கறையை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் பாகிஸ்தான் அணியின் முழு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கிறது. பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பும் பாகிஸ்தான் அரசின் இந்த முடிவு நாட்டின் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.







