ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலேயே செம்மரக் கட்டைகள் ஆந்திராவில் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் மட்டுமே விளைகின்றன. இந்த செம்மரங்களை வெட்டி கடத்துவது சர்வதேச அளவிலான ஒரு தொழிலாக கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. செம்மர கடத்தலில் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தவிர சர்வதேச அளவிலான கடத்தல்காரர்களுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புகள் உள்ளன. இதனை கட்டுப்படுத்தி தடுப்பதற்கு ஆந்திர மாநில அரசு கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டிருப்பதாக செம்மர கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் , வனப்பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 இடங்களில் செம்மரக்கட்டைகளை வெட்டி தூக்கி வருவதாகவும், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றதாகவும், அவர்களை விரட்டி சென்ற போலீசார் தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 47 பேர் மற்றும் திருப்பதியை சேர்ந்த ஒருவர் ஆகிய 48 பேரை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 51 செம்மரக்கட்டைகள், இரண்டு கார்கள் ஒரு ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இதற்கு முன்னரும் செம்மரக்கட்டைகளை கடத்தி சிறைக்கு சென்று மீண்டும் அதே தொழிலுக்கு வந்த 6 பேர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.