நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் முதல் பாடலான பிகிலி பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி தொடர்ந்த இந்த வழக்கில் விஜய் ஆண்டனி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி தனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தியதாக இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
தனது அனுமதியி்ன்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்துள்ளதால் தனக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 12-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
– யாழன்







