2,870 கி.மீ. தொலைவை 60 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – குவியும் பாராட்டு!

கொல்லத்தில் இருந்து ராய்கஞ்ச் வரை 2,870 கி.மீ. தொலைவை 60 மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றர். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மைநாகப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் மேற்கு…

கொல்லத்தில் இருந்து ராய்கஞ்ச் வரை 2,870 கி.மீ. தொலைவை 60 மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றர்.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மைநாகப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த 60 வயதான போதினி பஹான்.  இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.  அவரின் சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச் நகருக்குச் செல்வதே அவரது கடைசி ஆசையாக இருந்தது. மேற்கு வங்கத்திற்கு அவரை விமானத்தில் அழைத்துச் செல்ல அதிக அளவில் செலவாகும் என்பதால்,  அவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல அவரின் மகன் முடிவெடுத்தார்.

இதனையடுத்து,  கருநாகப்பள்ளியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண் குமார் (வயது 28) ஆம்புலன்ஸை ஓட்டியுள்ளார்.  கடந்த ஏப்ரல் 22ம் தேதி காலை 7 மணியளவில் மைநாகப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஏப்ரல் 24ம் தேதி மாலை 4.30 மணியளவில் ராய்கஞ்ச் சென்றடைந்தது.  அதாவது சுமார் 2,870 கிலோ மீட்டர் தொலைவை தமிழ்நாடு,  ஆந்திரம்,  தெலங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாக வெறும் 60 மணி நேரத்தில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண்.

இந்த நிலையில், இது குறித்து பேசிய அருண் கூறியதாவது:

“நான் ஏற்கெனவே மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளேன்.  அது எனக்கு தெரிந்த வழிதான். போதினியை அவரின் ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதே எனது முக்கிய பொறுப்பாக இருந்தது.  எனது நவீன ஆம்புலன்ஸுக்கு நன்றி,  மிக எளிதாக 2,800 கி.மீட்டரை கடந்தோம்.  சாலைகளும் நன்றாக இருந்தது.  எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே ஆம்புலன்ஸை நிறுத்தினேன்.

சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்தும் போது போதினி சாப்பிடுவார்.  நான் ஆம்புலன்ஸின் நிலையை சரி பார்ப்பேன்.  எனது பயிற்சியும்,  அர்ப்பணிப்பும் பணியை முடிப்பதில் கவனம் செலுத்த வைத்தது.  போதினி தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் என்னால் அதிக நேரம் உணவுக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை.  எரிபொருள் நிரப்பும்போது 10 – 15 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தமுடிந்தது.

அப்போது,  சிற்றுண்டு மட்டுமே எடுத்துக் கொண்டேன்.  ராய்கஞ்சில் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது.  அவர்கள் தங்கும் இடத்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஒருநாள் ஓய்வுக்கு பிறகும் மீண்டும் ஏப்ரல் 26-ஆம் தேதி கேரளம் வந்தடைந்தேன்”

எனத் தெரிவித்தார்.

இதற்காக போதினியின் மகன் செளதீஷ் ஆம்புலன்ஸ் டிரைவர் அருணுக்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.