ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 40 நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் ஜம்மு பகுதியில் உள்ள கத்ரா பகுதிக்கு வடகிழக்கே 62 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும், இது ரிக்டர் அளவில் 3.4 கி.மீ. அலகாகவும் பதிவானது. இந்த நிலநடுக்கம் வடக்கு 33.17 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 75.57 டிகிரி தீர்க்க ரேகையிலும் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, தோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா பகுதியில் இருந்து வடக்கே 10 கி.மீ. தொலைவில் இருந்ததாகத் தெரிவித்தனர். இது ரிக்டர் அளவில் 2.8ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் வடக்கு 33.23 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 75.56 டிகிரி தீர்க்க ரேகையிலும் 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியுள்ளது.
கடந்த நான்கு நாள்களில் கத்ரா, தோடா, உதம்பூர், கிஷ்த்வார் மாவட்டங்களில் 11 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
-ம.பவித்ரா








