நடந்து முடிந்த அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ நிறுவனம் 50 சதவிகிதத்திற்கு அதிகமான அலைக்கற்றைகளை கைப்பற்றியுள்ளது.
4 ஜி அலைக்கற்றை உரிமத்திற்கான ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. 6 சுற்றுகளில் நடந்த முடிந்த அலைக்கற்றை ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 77,814.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அலைக்கற்றை ஏலம் குறைவான நேரத்தில் எடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை.
2016ஆம் ஆண்டு 7 நிறுவனங்கள் வரை அலைக்கற்றை ஏலத்தில் கலந்துகொண்ட நிலையில், இந்தமுறை ஜியோ, வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகியவை மட்டுமே பங்கெடுத்தன. ஏலத்தில் அதிகமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான அலைக்கற்றைகளை 57,122.65 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மத்திய அரசு எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்கு அலைக்கற்றை விற்பனையானது.
மொத்தம் விற்பனையான 855.6 MHz அலைக்கற்றையில், ஜியோவுக்கு 488.35 MHz கிடைத்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 18,698.75 கோடி ரூபாய்க்கு 355.45 MHz அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது. நிதிப் பிரச்சினைகளில் சிக்கிய வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.1,993.40 கோடிக்கு 11.80 MHz அலைக்கற்றைகளை மட்டுமே வாங்கியது.







