டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றனர். போலீசாரின் தடுப்பை மீறி அவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றதால் கைது செய்யப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.
விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டிசம்பர் 22ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.







