லண்டனில் இருந்து தேனி திரும்பிய மென்பொருள் பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஶ்ரீரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர், லண்டனில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது பெற்றோரை பார்ப்பதற்காக மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டிசம்பர் 20ஆம் தேதி தமிழகம் வந்தார். இதையடுத்து 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனை முடிவுகளில், மென்பொருள் பொறியாளருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், அவர் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய, அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்படவுள்ளது.
இதேபோல், துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வழியாக ஆண்டிபட்டி வந்தவர்களில், 5 வயதுடைய சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனுக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







