மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு, மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஆய்வுசெய்ய குழுக்களை அமைத்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில், மாமல்லபுரம் போன்று 16 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரத்து 109 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மாமல்லபுரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், இல்லை என்றால் சம்பந்தப்பட்ட செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஒத்திவைத்தனர்.







