கேரள மாநிலத்தின் தலைநகரம் மற்றும் முக்கிய மாநகராட்சியில் ஒன்றான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராக 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.
கேரள மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் மாநகராட்சியை கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
மாநகராட்சி மேயர் யார் என்பது குறித்து கேரள மத்தியகமிட்டி ஆலோசனை நடத்தியது. அதில் முடவன்முகல் வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
எலக்ட்ரீசியனின் மகளான ஆர்யா ராஜேந்திரன் ஆல் செயிண்ட் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.எஸ்.சி பயின்று வருகிறார்.இளம் வயதில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்யா, இன்று பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மேயர் பதவியடையும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.







