மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

கடன் பிரச்சனையில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் மற்றும் விமலேஸ்வரி தம்பதியினர்.…

கடன் பிரச்சனையில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் மற்றும் விமலேஸ்வரி தம்பதியினர். தம்பதியினருக்கு திருமணமாகி 10 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

மோகன் வளவனூர் சிறுவந்தாடு சாலையில் சொந்தமாக மரம் பட்டறை நடத்தி வருகிறார். இதனிடையே தினமும் வழக்கமாக காலை 9 மணியளவில் இவரது மரப்பட்டறை திறக்கப்படும் நிலையில் நீண்ட நேரமாகியும் கடை திறக்காத காரணத்தினால் அவரது தந்தை குப்புசாமி, மோகனின் வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், கதவை தட்டியுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மோகனும் அவரது மனைவி விமலேஸ்வரி ஒரு அறையிலும், மற்றொரு அறையில் மூன்று குழந்தைகளும் மின் விசிறியில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 5 பேரின் உடல்களை கீழே இறக்கி வைத்து வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோகன் மூன்று குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து இறந்தவுடன் நான்கு பேரையும் மின் விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு மோகன் உயிரை மாய்த்துக்
கொண்டது தெரியவந்தது.

உயிரை மாய்த்துக் கொண்ட மோகனின் வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் ரூ.40 லட்சம் அளவிற்கு கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை செய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

மேலும் கந்து வட்டிக்கு மோகன் கடன் வாங்கி உள்ளாரா என்ற கோணத்திலும் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply