தங்க புதையல் கிடைத்திருப்பதாக கூறி பித்தளையை விற்க முயன்ற தம்பதியினர்!

தங்க புதையல் கிடைத்ததகாவும் அதனை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பித்தளையை கொடுத்து ஏமாற்ற முயன்ற தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செந்தில்குமார் என்பவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். கடையில்…

தங்க புதையல் கிடைத்ததகாவும் அதனை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பித்தளையை கொடுத்து ஏமாற்ற முயன்ற தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செந்தில்குமார் என்பவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். கடையில் செந்தில்குமார் இல்லாத நேரத்தில் அவரது மனைவி மகாலட்சுமி மருந்ததுக்கடையை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆந்திராவைச் சேர்ந்த தம்பதிகள் மருந்துகளை மகாலட்சுமியிடம் வாங்கியுள்ளனர். குறிப்பாக மருந்துக் கடையில் மகாலட்சுமி இருக்கும் நேரத்தில் வந்து அந்த தம்பதியினர் அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளனர்.

ஒரு சமயத்தில் தாங்கள் மதுரை திருமங்கலத்தில் உள்ள விடுதியில் தங்கி இருப்பதாகவும் தாங்கள் அந்த பகுதியில் பள்ளம் தோண்டும் பணி செய்து வருவதாக அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர். பள்ளம் தோண்டும் பணியின் போது தங்களுக்கு தங்க புதையல் கிடைத்ததாகவும் அதனை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து மகாலட்சுமி தனது கணவர் செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். செந்தில்குமாரும் தங்க கட்டிகளை எடுத்து வாருங்கள் பார்த்து சொல்கிறேன் என அந்த ஆந்திரா தம்பதிகளிடம் தெரிவித்துள்ளார். தங்கத்தை எடுத்து வந்த தம்பதிகள் செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். அந்த தங்கக் கட்டிகள் மீது சந்தேகமடைந்த செதில்குமார் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருந்துக் கடையில் மகாலட்சுமி இருக்கும் நேரத்தில் தங்க கட்டிகளை மேலும் குறைவான விலைக்கு தருவாதகவும் கணவரிடம் தெரிவிக்காமல் வாங்கிக் கொள்ளவும் என அந்த ஆந்திரா தம்பதிகள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மகாலெட்சுமி தங்க கட்டிகளை வாங்கிக் கொள்வதாக கூறி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ரகுராமன், அங்கம்மாள் என்பதும் அவர்கள் வைத்திருந்தது பித்தளை கட்டி என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இவர்கள் தமிழகம் முழுவதும் இது போல் பெண்களிடம் நட்பாக பேசி அவர்களை நம்ப வைத்து தங்கம் புதையல் கிடைத்ததாகவும் குறைந்த விலைக்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஆந்திரா தம்பதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply