அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில் அவரது ஜாமின் தொடர்பான விசாரணை பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணை காவல் கோரிய மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்பே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்படுமா மற்றும் செந்தில் பாலாஜியை மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை 3.30மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் துரை கண்ணன் முறையீடு செய்துள்ளார். காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு ஜாமின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கபடும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.