உலக நாடுகளின் கவனம் முழுவதும் இப்போது உக்ரைன் மீது குவிந்துள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போர்தான் அதற்கு காரணம். கடந்த 24ம் தேதி காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க, மற்ற உலக நாடுகளின் எதிர்ப்பினை பெற்றது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் மற்ற நாடுகள் தலையிட்டால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அதிபர் புதினின் அறிவிப்பெல்லாம் போர் பதற்றத்தின் உச்சமாக இருந்தது. போரில் இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள், தளவாடங்கள் என பரஸ்பரம் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையே நிலவும் இந்த போர் சூழலால் இந்தியா எத்தகைய பாதிப்புக்குள்ளாகும்?, என்ன தாக்கம் ஏற்படும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலையானது கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக உலக அளவில் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வர முயன்றுவரும் சூழலில் இத்தகைய நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் அதிகளவு கிடைக்கிறது. உலகில் இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் நார்வேக்கு அடுத்தபடியாக உக்ரைன் உள்ளது. உக்ரைனிலிருந்துதான் ரஷ்யா, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கு 40 முதல் 50% இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள், மிகப்பெரிய குழாய்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
எண்ணெய் விலை உயர்வு;
எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை 80 டாலரில் இருந்து 100 டாலராக உயர்ந்துள்ளது. 2021ம் ஆண்டின் இறுதியில் 90 டாலர் அளவை தொட்டிருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 100 மற்றும் 110 டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யாவிலிருந்துதான் தீர்த்துக்கொள்கிறது சீனா. இந்தியாவும் தனக்கான 1% எண்ணெய் தேவையையும் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. உக்ரைனில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் ஐரோப்பிய கண்டத்திலேயே மிகவும் ஆழமானவையாக காணப்படுகின்றன. உக்ரைனில் இருந்துதான் இந்தியாவும் தனது மின்சார உற்பத்திக்கு தேவையான பெருமளவிலான நிலக்கரியை இறக்குமதி செய்துகொள்கிறது. மேலும் 2021ம் ஆண்டில் மட்டும் 43,400 பேரல் கச்சா எண்ணெயை வாங்கியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு?
இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டுள்ள சூழலில் எந்த நாட்டினரிடமிருந்தும் கச்சா எண்ணெய்யையோ அல்லது நிலக்கரியையோ இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் என்றும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இவை ஒரு பக்கம் என்றால் இந்தியாவின் ஏற்றுமதியில் பெருமளவு பங்கு வகிக்கும் நாடுகள் ஐரோப்பிய நாடுகள்தான். குறிப்பாக இந்தியாவின் ஸ்டீல் மற்றும் பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. போர் பதற்றம் அதிகரிப்பதால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி என பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் நிலையும் இருக்கிறது.
இந்திய மாணவர்கள் நிலை?
உக்ரைனில் ஏற்படும் போர் சூழலில் மற்ற உலக நாட்டு மக்களுடன் இந்தியர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பது இங்கே குறிப்பானது. 2019ம் ஆண்டு நிலவரப்படி 18,000க்கும் மேற்பட்டவர்கள் உக்ரைனிலிருந்து பயின்று வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி அந்த எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கவே செய்துள்ளது.
இதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவரகளும் அதிகம். உக்ரைனில் இருக்கும் மாணவர்கள், இது குறித்து தெரிவிக்கையில், “எச்சரிக்கை ஒலி எழுப்பும் நேரத்தில் பாதுகாப்பான இடத்திற்கும் செல்ல அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்”. உக்ரைனில் வாழும் இந்திய மாணவரக்ள் மற்றும் சாமானியர்கள் போர் நேரத்தில் அவதிப்படும் நிலையில் அவர்களை பாதுகாக்க இந்திய அரசு போதிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.
எழுத்து; யுவராம் பரமசிவம்