உத்தர பிரதேசத்தில் மாநிலம் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் நேற்று மாலை சென்றுக் கொண்டிருந்தது. இந்த ரயில், மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பத்னேரா ரயில் நிலைய சந்திப்பு அருகே சென்றபோது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனையடுத்து உடனடியாக ரயில் நின்றது. பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி ஓடினர். அவர்கள் தண்டவாளத்தை கடந்தபோது மறுபுறம் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் யணிகள் மீது மோதியது.
இதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து நேற்று மாலை 4.19 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்ததோடு, மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாக உறுதியளித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் அறிவித்தார். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“ரயிலில் உள்ள கேட்டீனில் டீ விற்பனையாளர் ஒருவர் ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பற்றியதாகக் கூச்சலிட்டார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷ்ரவஸ்தியைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அதைக் கேட்டு, ரயிலில் பொருத்தப்பட்டிருந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இச்சம்பவம் பொதுப் பெட்டியிலிருந்த அனைவருக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
சக பயணிகளிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், ரயில் நின்றதும் சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு பக்கங்களிலிருந்தும் ரயிலில் இருந்து குதித்தனர். அருகிலுள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. தீ விபத்து பற்றிய வதந்தியினால் தான் இந்த விபத்து ஏற்பட்டது”
இவ்வாறு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்தார்.









