2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தேசிய சாதனையை சமன் செய்துள்ளார்.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.டி.உஷாவின் தேசிய சாதனையை வித்யா தொட்டுள்ளார். அவர் தனது ஓட்டத்தை 55.42 வினாடிகளில் முடித்தார். இந்த சாதனை நேரத்தின் மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவரது வலுவான செயல்பாட்டிற்குப் பிறகு, இந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் தங்கம் வெல்வது உறுதியாகக் கருதப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், பி.டி.உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55.42 வினாடிகளில் முடித்தார். இறுதிப் போட்டியில் நான்காவது இடம் பிடித்தார். இந்த போட்டியில் பி.டி.உஷா பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும், இந்த அபார செயல்பாட்டின் மூலம் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர்களால் முறியடிக்க முடியாத சாதனையை படைத்தார். இந்நிலையில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்த தேசிய சாதனையை வித்யா தொட்டுள்ளார்.
யார் இவர்?…
கோவையைச் சேர்ந்தவர் வித்யா ராமராஜ். கொரோனாவுக்கு பிறகு அவர் சென்னைக்கு மாறினார். இவரது தந்தை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர். வித்யாவுக்கு ஒரு சகோதரி உள்ளார். அவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார். அவருடைய சகோதரியின் பெயர் நித்யா. வித்யா மற்றும் நித்யா இரட்டை சகோதரிகள். இருவரும் தடகளத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வித்யா பங்கேற்ற நிலையில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா பலம் காட்டி வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு இரட்டைச் சகோதரிகள் இணைந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை.