நானி இரட்டை வேடத்தில் நடிக்க ராகுல் சாகிராதித்யன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “ஷ்யாம் சிங்கா ராய்”. திரைப்படத்திற்கு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய மிக்கி ஜே.மேயர் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனரான வாசுதேவ் இயக்கும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடிக்கிறது. இதனால் அவரை இந்தியில் சினிமா இயக்க அழைக்கிறார்கள். அங்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் திடீரென கைது செய்யப்படுகிறார். தங்களது பதிப்பகத்திற்கு சொந்தமான நாவலை கதாபாத்திரங்களை கூட மாற்றாமல் அப்பட்டமாக காப்பியடித்து திரைப்படம் எடுத்ததாக பதிப்பகம் ஒன்று அவரின் மீது வழக்கு தொடுக்கிறது. ஆனால், தான் எழுதிய கதையைத்தான் படமாக எடுத்ததாகக் கூறுகிறார் இயக்குனர் வாசுதேவ்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாசுதேவ் மீது ஏன் வழக்கு தொடுக்கப்படுகிறது? அவர் நாவலில் இருந்து காப்பியடித்துதான் திரைப்படத்தை எடுத்தாரா? வழக்கிலிருந்து எப்படி மீண்டும் வருகிறார் என்பதுதான் படத்தின் மையக்கதை. தேவதாசி ஒழிப்பு முறை, பட்டியலினத்தோர் பொதுக்கிணற்றில் நீர் எடுக்கும் உரிமை, ஆணவக் கொலை என ஆந்திர சினிமா பேசத்தவறிய அல்லது பேச மறந்த பல செய்திகளை அழுத்தமாக பேசிச்செல்கிறது ஷ்யாம் சிங்கா ராய்.
வாசுதேவாக அழகாகவும், ஷ்யாம் சிங்கா ராயாக அதிரடியாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானிக்கு இத்திரைப்படம் ஒரு திருப்புமுனை. ப்ளாஷ்பேக்கில் அறிமுகமாகும் ஷ்யாம் சிங்கா ராய், முதல் காட்சியிலேயே ஒடுக்கப்பட்டோருக்கு பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமையை பெற்றுத் தந்து, அம்பேத்கரை கண் முன் நிறுத்துகிறார். தேவதாசி முறையை எதிர்த்து வில்லனை அவர் துவம்சம் செய்யும் காட்சியில் ஆந்திர சினிமாவுக்கே உரிய நாயகத்தனம் இருந்தாலும் பார்ப்போரை நிமிர்ந்து அமரச்செய்கிறது.
சாதிக் கொடுமைகளை எதிர்த்து போராடுவதால் சகோதரர்களின் எதிர்ப்புக்கு ஆளாகும் ஷ்யாம், தன்னை எப்போதும் திட்டிக்கொண்டிருக்கும் அண்ணனிடம் மரியாதை காட்டி நெகிழ வைக்கிறார். ஆனால், உடன்பிறப்பை விட சாதிதான் முக்கியம் எனக் கருதும் சகோதரர்களாலேயே அவர் ஆவணக் கொலை செய்யப்படுவது நெஞ்சை உலுக்குகிறது.
கோயிலில் நாட்டியமாடும் தேவதாசியான மைத்ரியை (சாய் பல்லவி) பார்த்தவுடன் அவர் மீது காதல் கொண்டு தன் கொல்கத்தா பயணத் திட்டத்தை கைவிடுகிறார் ஷ்யாம் சிங்கா ராய். இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் அழகியல். ரோஜாத் தோட்டங்களுக்கு நடுவே அழைத்துச் சென்று அவருக்கு ரோசி என பெயர் வைக்கும் காட்சி, ஆற்றுக்கு நடுவே படகில் காதல் வளர்க்கும் காட்சிகள் அத்தனை அழகானவை, மீண்டும் பார்க்கத் தூண்டுபவை.
கோயிலில் தேவதாசி பெண்ணாக நாட்டியமாடுவது, வில்லனை எதிர்ப்பது என நானிக்கு இணையான நடிப்பைத் தந்துள்ளார் சாய்பல்லவி. இறுதியாக ஷ்யாமின் மறுபிறவியை சந்திக்கும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பைத் தந்துள்ளார். வாசுதேவின் ஜோடியாக வரும் கீர்த்தி ஷெட்டி ரசிக்க வைக்கிறார். வழக்கறிஞராக வரும் மடோனா செபஸ்டியானுக்கு நடிப்பில் சோபிக்கும்படியாக எதுவுமில்லை. காதலும் கடந்து போகுமில் பார்த்தவர்தானா என நினைக்க வைக்கிறார்.
தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டாலும், தமிழில் எழுதப்பட்ட வசனங்கள் சாதி மற்றும் மூடநம்பிக்கைகள் மீது சாட்டையை வீசுகின்றன. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நேர்த்தியான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் ஜான் வர்கீஸ். முற்போக்கான நிறைய விஷயங்களை திரைப்படத்தில் இடம்பெறச்செய்துவிட்டு மறுஜென்மம் என்கிற அறிவியலுக்கு புறம்பான ஒன்றை திரைப்படத்தில் வைத்தது நம்பும்படியாக இல்லை. எனினும், அதனை வைத்தே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தான் சொல்ல வேண்டிய கருத்துக்களைக் கூறியுள்ளார் இயக்குனர்.
முதல் அரை மணி நேரத்திற்கும் சற்று அதிகமான காட்சிகளை சற்று பொறுத்துக்கொண்டு பார்த்தால், அடுத்த முழு நேரத்திற்கும் நமக்கு அற்புதமான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஷ்யாம் சிங்கா ராய் அனைவரும் பார்க்க வேண்டிய புரட்சி நாயகன்.