உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின் கிரிமீயா தீபகற்பகத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இந்நிலையில், உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்புடன் சேர்க்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைத்தால், தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது. இதனால், போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதால், உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட 12க்கும் அதிகமான நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டன. இந்நிலையில், உக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்புவதாக ரஷ்யா செய்தி வெளியிட்டுள்ளது. டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் ரயிலில் ஏற்றப்பட்டிருந்த புகைப்படத்தை ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உக்ரைன் எல்லைகளில் ரஷ்யா படைகளை குறைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த இன்னும் சாத்திய கூறுகள் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளின்படி ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என புதின் வலியுறுத்தியுள்ளார்.