சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. 
இதையடுத்து அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த, அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி, மாற்றியமைக்கப்பட்டதற்கு காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, சொத்துவரி உயர்த்துவது தொடர்பான அரசாணையையும், மாநகராட்சி தீர்மானங்களையும் செல்லும் என தீர்ப்பளித்தார். மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.







