மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிராவில் சாவ்லா நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று, இன்று காலை 6 மணிக்கு அமராவதியில் இருந்து தர்ணிக்கு 60 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்து 8.30 மணியளவில் மேல்காட் புலிகள் காப்பகம் வழியே சென்றுள்ளது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. எனினும், விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







